RSS

வெத்துப் பொழப்பு…

oviyam aasiriyan

ஆசிரியன் என்று அல்ல,  எந்த தொழிலை ஏற்றாலும் அதில் நமக்கென இருக்கும் தனித்துவ திறமையைப் பயன்படுத்தி, நாம் செய்யும் தொழிலில் ஆர்வமுடன் செம்மையாக செயயும் போது, மனம் மிகுந்த ஆனந்தம் அடைகிறது.

மிக முக்கியமாக நாம் செய்யும் வேலைக்கு நமக்கு வழங்கப் படும் ஊதியமே அதற்கான பயனாக கருதப்படும். அவ்விதம் நாம் பெற்ற சம்பாத்தியமே நாம் செலவிட்ட நம் திறமையின், ஆற்றலின் பயனாக கருதப்படும் என்பது உலக உண்மை.

ஆனால் அது சில நேரம் நமக்கு உறைப்பதேயில்லை.

தொன்னூற்று நான்காம்  ஆண்டு நம் பக்கத்து கிராமம் ஒன்றில் ஆசிரியனாக பணியாற்றத் துவங்கினாலும், சில ஆண்டுகளில் அங்கிருந்து மாறி வேறு ஒரு பள்ளிக்கு வந்து 2006 வரை, அதே வாத்தியார் வேலையை அடிமை வேஷம் போட்டபடி அலுப்பில்லாமல் செய்தேன்.

பதின்பருவ வயதுக்கு வந்த மாணாக்கர்கள் இருபாலரும், என்னை சூழ்ந்தபடி, எனது கற்பித்தலைக் கொண்டாடியம் போது, மது உண்ட வண்டாக “மதியின்றி” மயங்கிக் கிடந்தேன். பெரும்பாலான நேரம் பள்ளியில் மாணவர்களுடன் கழித்தேன். சில சமயம் எனக்கு சோறு போட்ட விவசாயத்தின் கூலியாள் கூட என்னைக்காண வேண்டி அன்றாடக் கணக்கு வழக்குக்கு, என் முன்னிரவு நேர பாடவேளைக்கு, வகுப்புக்கு வரும்படியாக கழியும் தொடர்ந்த நில்லாத பணி.

சில நேரம் மிக அலுப்பாக உணர்வேன்.

வெளிநாடுகளில் இருந்து ஊருக்கு வரும் நண்பர்கள் எதேச்சையாக கேட்பார்கள். என்னப்பா எவ்ளவு நாளைக்கு இப்டி சும்மா ஊர்ல கெடக்கப் போற? காத்துள்ள போதே தூத்திக்கிட வேண்டாமா? உன் இளமைக் காலத் திறமையை ஆற்றலை விழலுக்கு இரைச்ச நீராக வீணடித்து விடாதே. கவனிச்சுக்கப்பா! “சில சமயம் இவங்க ஏமாத்திருவாங்க”…

இல்லைப்பா நமக்கும் தகுதியிருக்கில்லடே? இத்தனை காலம் இருந்தாச்சு. அப்டியே சும்மா போட்டத போட்டபடி விட்டுட்டு போக முடியுமா? ன்னு மீண்டும் அதே அடிமை சங்கிலியை ஆசைப்பட்டு என் கழுத்தில் நானே பூட்டிக்கிட்டு,

மாணவர்களின் சார்! சார்! என வளைய வரும் சப்தத்தைக் காதில் கேட்டபடி, “எங்க சார்வா” என அழைக்கும் அந்த போதைக்கு ஒன்று இரண்டல்ல “பதிமூன்றாண்டுகள்” பைத்தியம் போல மயங்கி கிடந்தேன்..

பத்துப் பைசாககுப் பிரயோசனமில்லை. அன்று நான் பார்த்த அந்த வெத்துப் “பிழை’ப்பைத் தவிர்த்து வயித்துப்பிழைப்புக்காக, இன்று போல எங்காவது வந்து என் சக்தியை செலவழித்திருந்தால் அதன் பலனே வேறு மாதிரியாகியிருக்கும்.

காலமெல்லாம் நான் சம்பாத்தியம் செய்யும் அழகைக் காண வேண்டி எனக்காக் காத்திருந்த என் கண்மணியான வாப்பாவும் உம்மாவும் அவ்விதம் என்னைக் காண முடியாமல் போனது. ஒருகட்டத்தில் வஞ்சகத்தால் என் கழுத்தறுபட்டு வடிந்த சூடான செங்குருதியை மட்டுமே கண்டு வேதனையுடன் கண்ணீருடன் தன் கண்ணை மூடிக் கொண்டார்கள்.

ஆயினும் எனக்குத் தான் மனதுக்குள் என் சம்பாத்தியம் கொண்டு அவர்களை ஒருநாள் கூட தாங்க முடியவில்லையே என்ற தீராத வருத்தம் உண்டு.

ஆனால் இன்று அதே அடிமை சங்கிலிக் கணணிக்குள் இன்னமும் எததனையோ அப்பாவி இளைஞர்கள் இளம்பெண்களின் சிக்கி வீணாக காலவிரயம் செய்யும் காட்சியைக் காணும்போது வேதனையில் துடிக்கிறேன் என்னாலான ஆன உதவியாக, என் சுய வாழ்வில் நான் பட்ட அனுபவத்தை வெட்கமின்றி வெள்ளந்தியாக அவர்களுடன் பகிர்ந்து கொண்டேயாக வேண்டிய கட்டாயத்தை இங்கே உணர்கிறேன். பகிர்கிறேன்.

நாலு பேருக்கு மத்தியில் நானும் ஒரு ஆசிரியர் ன்னு சொல்லிக்கிட்டு நல்ல உடை உடுத்திக் கொண்டு நானும் பள்ளிக் கூடம் போறேன்னு ஆணும் தோளில் ஒரு ஹேன்ட் பேக்கும் போட்டு பெண்ணும் பள்ளிகளுக்கு, சுயநிதி எனும் அலங்கார வார்த்தையுடன் சொற்ப காசுக்கு வேலைக்கு போகலாம்.

ஆனால் உங்களுக்கென்று ஒரு குடும்பம் இருக்கும் போது, உங்களை உங்களின்  குடும்ப தேவையை பூர்த்தி செய்யவும் முதலில் தயாராக்கிக் கொள்ளுங்கள், உங்களின் அண்ணன் தம்பி மற்றும் உங்களுக்கு பாடுபட்டுப் போடும் உறவுகளின் சம்பாத்தியம் தவிர்த்து உங்களால் உங்களின் ச்மபளங் கொண்டு குடும்பம் நடத்தவியலாத ஒரு கணவனாக, நீங்கள் இருந்து என்ன பயன்?. இனியும் பெருமைக்கு மாரடிக்கும் அந்த பணியை தொலையுங்கள்… என் போன்றவர்களின் பதின்மூன்றாண்டு அடிமுட்டாளாகக் காலங்கழித்த அனுபவம் கண்டாவது உடனடியாக உஷாராய் விலகுங்கள்.

கிளம்புங்கள்!, பிரபஞ்சத்தில் பறவையைப் போல சிறகடித்துப் பரவுங்கள், இந்த இளமைப் பருவத்திலேயே எங்காவது வேலை தேடிப் போய் சேருங்கள் அல்லது சேர முயலுங்கள். கஷ்டமென்றால் என்னவென்று கண்டு அதனை அனுபவியுங்கள். ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பின் வெளிக்கிளம்பி மனம் நிறைய ஏமாற்றங்களை சும்மந்து கொள்ளாதீர்கள். இந்த உலகம் உங்கள் ஒவ்வொருவருக்கும் உரிமையுடையது. என்னைப் பொருத்தமட்டில் எனக்கானது.. அதுபோல உங்களுக்கும் வெளியூரோ வெளிநாடோ வெளியேறிச் சென்றால் தான் நமக்கான உலகத்தை நாம் கண்டு உணரமுடியும்.

முன்பு நான் பணியாற்றிய காலத்தில் அப்போது காலியாகும் ஒரு பணியிடத்தில் சும்மா பணியாற்றிய எங்களை நிபந்தனைகளின்றி போடும் வாய்ப்பு இருந்தது. சிலரை போடவும் செய்தார்கள். ஆனால் இன்று அதற்கான ஆசிரிய தகுதித் தேர்வு எழுதி வென்றால் மட்டுமே அந்தப் பணி செய்ய நீங்கள் தகுதியடைய முடியும் எனும்போது, ஊரில் கிடந்து உங்களை நீங்களே அழிக்காதீர்கள்.

இதிலும் மிகப் பெரிய கொடுமை பக்கத்திலுள்ள பாலர் பள்ளியில் பிரிகேஜி எனும் மழலையருக்கு ஏபிசிடியை பாட்டோடு சொல்லிக் கொடுக்க  பட்டம் படித்த நம் பெண்மக்கள், இஞ்சினியர் படிச்சவங்க எல்லாம் போய் மெனக்கெடுறாங்க. ச்மபளமெல்லாம் கேட்டா சங்கு அறுந்து போகும். அதான். வேறென்ன கொடுப்பாங்க.

ஆனால் உங்களின் ஒஜீபனம் எனும் ரிஸ்கு அங்கு இல்லை. நீங்களே ஒரு கல்வி நிலையம், டியுசன் சென்டர், பாலர் பள்ளி போல நம்பிக்கையுடன் ஆரம்பியுங்கள். முடிந்தால் வீட்டிலேயே குழந்தைகளுக்கு கிடைத்த நேரத்தில் பாடம் சொல்லிக் கொடுத்து கழியுங்கள்.

ஒரு பிசாத்துக் காசுக்காக பட்டமும் பெரிய பெரிய பட்டமெல்லாம் படிச்சிட்டுவந்து கண்டவனுக்கும் பயந்து சாகனுமா என்ன?

 

பழைய யாவமா இருக்கியா? மறக்கலியா அந்தப்புள்ளய?

kadayanallur 1

மூன்று வருடங்களுக்கும் அதிகமாக, நீண்ட நாட்கள் மறுபூமியில் வாழ்ந்துவிட்டு தன் வீடு திரும்பியவனுக்கு, தன் சுற்றமும் நட்பும் தன்னைத் தேடி வந்து குசலம்விசாரித்து முகம் காட்டி மகிழ்ந்தபின், மாலையில் சுகாதாரம் கூட்டிப் போக வீட்டுக்கு வந்த நண்பன் நாகூர் மீரான் அவனுடன் புறப்படுவதற்கான காத்திருத்தலில்…

தன்நண்பனிடம் மெல்லக் கள்ளச்சிரிப்புடன் காதருகில் கேட்டான்.
நாவூரு எம்புடு நாளாச்சு? மைமூனப் பாக்கணும்ன்னு தேடுதப்பா. இப்போம் சுத்தி அவ்வூட்டு வழியா மேக்க போவமெ? அந்தப் புள்ளையையும் பாத்தாக்ல இருக்குமே?

கேக்கணும்ன்னு காத்திருந்தது போல இவன் பதில் சொன்னான்.
வாண்டண்டே… இப்பம் வாண்டாம். பெறாய்க்கி பாத்துக்கிடுவோம்.

எட்டுப் பத்துப் பேராக ஒரு குழுவாக மேற்கே செல்லும் இவர்களில் நாவூருன்னு அழைக்கப்படும் நாகூர்மீரான் தவிர அனைவரும் வெளிநாடுகளுக்கு சபுராளிகளாக பயணித்துவிட, இன்னமும் விசா தேறாமல் ஊரில் இருக்கும் நாகூர்மீரான் மட்டும் வரவும் போகவுமாயுள்ள நண்பர்களின் ஊரில் உள்ள ஒரேகூட்டுக்காரன்.

கிழித்த வாழையிலைத் துண்டில் நண்பன் ஆர்டர் செய்து வந்த அல்வாவை நுள்ளி எடுத்து வாயிலிட்டவன் மெல்லச் சொன்னான்.
மசூது! நீ ன்னோம் பழைய யாவமா இருக்கியா? மறக்கலியா அந்தப்புள்ளய?
எதிர்பாராத இந்தக் கேள்வியால் கொஞ்சம் கவலையும் கலவரமுமாக ஏண்டே அப்டிக் கேக்க? என்றான்.
இல்லப்பா அந்தப்புள்ளய இப்போம் வேற பெரிய இடத்துல பேசிப்போட்டாச்சுப்பா. மாட்டம்ன்னு சொல்லி அந்தப்புள்ள மொதல்ல கூட்டம் போட்டதாவும் அதுக்குப் பெறவு நல்ல மாப்ள தறியில கெடந்து சாவ வாண்டாம், மாப்ள ஓதி.. கலியாணமுடிஞ்ச கையோடே குடும்பத்தையும் கூட்டிக்கொண்டு போய் வெளியூர்ல வச்சுக்கிடப் போறார்ன்னு சொல்லி அந்தப்புள்ளைட்ட பேசி சம்மதம் வேங்கிட்டாங்கோ….
கல்பு உடைந்து காலடியில் பூமி நழுவியது….

அன்றொருநாள்…
பயணம் புறப்படும் முதல் நாள் இருவரும் பேசிவைத்தது போல ஊருணிப் பள்ளிவாசலின் குறுகிய சந்துக்குள் சந்திக்க எண்ணி, சட்டென தன்னைக் கடந்த அவளை, அவளது தோழிமார்களுடன் செல்லும் போது மருட்சியான விழிகளோடு கண்டவன்.. அவளிடம் பேசணும் என்பது போல சைகையில் உணர்த்த, புரிந்தும் புரியாமலுமாய் அங்கே தன் தோழிகளை கொஞ்சம் தள்ளி நிற்க வைத்துவிட்டு அவனது வரவுக்காக இருளில் காத்து நின்றவளை நெருங்கிய போது உணர்ந்தான்…

ஒரு இரண்டடி தூரத்தில் அவளது நடுக்கம் அவனுக்கு நன்றாகத் தெரிந்தது…

பரபரப்பும் பயமும் நெற்றியில் சுருண்டிருந்த அழகான மயிர்க்கற்றையில் நனைந்த ஈரமிக்க வியர்வையும் கன்னக் கதுப்பில் அப்பிய சிந்தூரச் சாயமுமாக வெட்டி வீழ்த்திப் படபடக்கும் கருவிழி கொண்டு நின்ற அவள்….
அவன் அவளைக் காணாத போது ஓரக்கண்ணால் கண்டு கொள்ள இப்போ பேசினாள் கொஞ்சம் கிசுகிசுப்பாக…
ன்னாங்கோ எனக்குப் பயமாருக்கு.
என்னன்னு சொல்லுங்க சடாருன்னு நாம் போணும்…

இவன் லேசாகக் கனைத்தவாறு, பயமும் நடுக்கமும் நீங்கியவாறு,
நான் நாளைக்கி பயணம். இனிம ரண்டு மூணு வருஷம் கழிஞ்சு தான் ஊருக்கு வருவேன். ஒன்ன தான் எனக்கு கடுமையாத் தேடும் மைமூனு. ஒன்னப்பாக்காம நான் என்ன செய்யப் போறமுன்னு எனக்கு தெரியலை. லேசாக கண்கலங்கியவனிடம் சிறிதுநேர மௌன இடைவெளிக்குப் பின் அவள் தயங்கி தயங்கி சொன்னாள்…

அவளது முகம் நோக்கியவனுக்கு அவள் கண்கலங்கியதை உணர முடிந்தது.. நீங்கோ பெய்ட்டுவாங்கோ.. கையிலிருந்த பூக்களை காட்டினாள்.
நானும் பளயாச பெய்ட்டு ஒங்களுக்கு துவா கேட்டுட்டு தான் வாறன்.
இத வாங்கிக்கோ ன்னு அவன் நீட்டிய அந்தப் பொதியில் ஒரு இருபது ரூபாய் பணம் பயணக் காசாக இருந்தது.
கிளம்பும் போது அவள் சொன்னாள்… “உயிரைக் கொடுத்தாலும் உங்களுக்கு வாக்கப்பட வேண்டி காத்திருப்பேன்”.

– கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ்.

 

 

உதிராத சருகுகள்…

oviyam

கருத்த குரங்கிருட்டின் ஒட்டுமொத்த மௌனத்தையும் செவிட்டில் அறைவது போல ஒரு குண்டு பல்பு எரிய, பாவு விரிச்சுக்கட்டி சட்டக் சட்டக் பெட்டக் என தாளந் தப்பாது கூதல் காற்று வீசும் அதிகாலை நேரத்திலும் காக்குளிக்குள் இறங்கி அடிச்சு நொறுக்கும் அவள்

ஆசி எனும் ஆசியா..

நெய்யும்போது அசைந்தாடும் பலவப்படியில் ஒட்டப்பட்டிருந்த உடைந்த ஒரு சில்லுக் கண்ணாடியில் தனது முகம் நோக்கினாள். வில்லில் கோர்த்த ஒரு அம்பை இழுத்துப் பிடித்து நேர் நிமிர்த்தியதைப் போல கிண்ணெனும் தேகம். காண்பவர் வெடுக்கென கண்களை திருப்பிவிட முடியாதபடிக்கு இதயத்துள் துளையிட்டு நுழைந்திடும் அவள் முகத்திலேயே ஒட்டாத இரண்டு மைவரியிட்ட முட்டைக்கண்கள்… அவள் அன்றைய இளவட்டங்களின் இதய ஏக்கங்களின் முக்கியக் குவியம்.

கழுத்தில் கருப்புக்கயிறு ஒன்றை மட்டுமே கட்டிய ஏழைக்குமரு அவளின் தாய் கட(ன்)த்துக்கு வாங்கிவரும் தேங்காய் எண்ணெயை நீவிநீவி, குப்பையாய் வளர்ந்து குலுங்கிக் காடாய்க்கிடங்கும் மினுங்கும் கூந்தல் அவளுக்கு.

அவள் அழகி.

காய்ப்பேறிய உள்ளங்கையில் சிக்கெனப்பற்றிய இழுபுரியைப் இழுக்கையில் ஆடும் பலவைப்படியில் அந்தக்கண்ணாடித் துண்டில் ஜன்னலை தாண்டியபடி தெருவில் நிற்கும் அவளது அவனின் பிம்பத்தை இனம் கண்டு கொண்டாள் சிலிர்த்தாள்…

விடியக் காத்திருந்த அவன் கையில் புல் ஒன்றை பாவு வாளிப்பதற்காக எடுத்துக்கொண்டு வழக்கம் போல அவளின் வாசலில் ஆவலோடு கூறு கட்டிவிட்டு யாரும் காணாதபடிக்கு எதிர்பார்ப்புடன் ஜன்னலை நோக்கினான்.

சாடை அறிந்து மென்மையாகத் திரும்பியவள் அவனைப் பார்க்க எண்ணினாலும் எதிர்கொள்ளத தைரியமின்றி அவன் முகம் பார்க்க இயலாமலேயே காதலைச் சிந்தியபடி மீள் திரும்பினாள்…

பிறவிப்பலன் அடைந்தாற் போல அண்ணன் மெல்ல ராகம் கூட்டிப் பாடி வயிற்றை எக்கி வாளிக்க தொடங்கினார்.

ஓரிடம் பார்த்த விழி வேறிடம் பார்ப்பதில்லை

உன்னிடம் வந்த மனம் என்னிடம் சேரவில்லை….

எம்ஜியார் ரசிகரான அவரது நெற்றியில் விழுந்து புரண்ட குருவிக்கூடு கிராப்புச்சேக்கு வியர்வயில் நனைந்தபடி, ஈரமான கரணை கரணையான தோள்கள் பளபளப்பாக அவரது முன்டாப்பனியனில் எஞ்சியபடிக் காட்சியளிக்கையில் ஒரு திரையின் ஆதர்சக் கதா நாயகனையொத்த ஆணழகனாக அவரை அவளுக்குக் காட்டியது.

ஒரு வைகறையில் வசந்தம் குலுங்கும் வாலிபஇதயங்கள் ஒற்றை ஜன்னலை நடுவிலாக்கி கண்களால் பருகிக்கொண்டு ஆடிய மௌனமான காதல் விளையாட்டில், சாட்களில்லாமல் பெரும்பாலான பொழுதுகளின் புலர்ச்சிகளில் பூக்கள் இல்லாமலேயே அவள் வாசம் நிறைந்தாள்… புள்ளினங்கள் இல்லாமலேயே கானங்களை இசைத்தாள். இரவின் யாமங்களில் விடியலில் தோன்றப்போகும் அவனது வரவு எனும் வசந்ததுக்காக வாஞ்சையுடன் காத்துக்கிடந்தாள்…

போன ஒடுக்கத்துப் புதனில் வீடடங்க கிளம்பிய வெளிக்கிளம்பலில் ஏள்சனப்பாற (ஏழுசுனைப்பாறை)யில் தோழியின் மூலம் அவன் கேட்ட கேள்விக்கு அவள் சொன்ன பதில்

“புடிச்சிருக்கு”.

ஒற்றை வார்த்தை தான் ஆயினும் எத்தனை உணர்ச்சிகளை அவளுக்குள் நுழைத்திருந்தது.

பதில் சொன்ன அன்று அவளையே அவளுக்குப் பிடித்துப் போயிற்று. குடும்பம் குடும்பமாக வண்டி மாடுகள் கட்டி வந்தவர்கள் இருந்தாலும், கால்நடையாய் குடும்பம் மொத்தமும் சிரித்துப் பேசி குலுங்கி நடக்கையில் தாயமாடித் தாயமாடி தன்னை துரத்திக்கொண்டு அவன் வருவதை அவள் எண்ணி எண்ணி இதயம் பூரித்துப்போவாள்.

வீட்டுக்கு வந்ததும் முதல் வேலையாக அகாலமாய்க் கிடந்த புறத்தோடத்தில் ஓரமாய் பூத்துக்கிடந்த ஒன்றிரண்டு பிச்சிப்பூக்களை அள்ளி உள்ளங்கையில் வைத்துக் கொண்டாள்…

விடாது துரத்திய அவர்தம் களவொழுக்கம் தினமும் நல்ல தண்ணி கிணற்றுக்கரையில் அளப்பம் பேசியதாகவும், நடந்து வல்லத்துக்கு கிளம்பி சோடியாக பேசிக்கொண்டே கணவன் மனைவிபோல பாவனை செய்தபடி செல்லம் கொஞ்சிக் கினுன்கினாலும்,

சட்டென முடிந்துபோகும்படி…..

தோழிப்பெண்ணின் திருமணத்தில் இரவொன்றில், தூங்காவிழிகளுடன் தாங்கா சோகத்துடன் மிகக் குறுகிய சந்திப்பில்,

அவனிடம் கண்ணீர் நனைந்த வார்த்தைகளில் சொன்னால்.. எங்கூட்டுல ஒங்களுக்கு என்னைக் கெட்டித்தர யாருக்கும் இஷ்டமில்ல, நான் ஒரு வாயில்லாப்பூச்சி.. என்ன செய்யனுமின்னு எனக்கு ஒண்ணுந் தெரியல.. என்னால என்ன செய்யமுடியும்?

அங்கே அவனும் அழுதான்.

அந்த தாத்தவின் பூத்துக்குலுங்கிய வசந்தகாலம் நாங்கள் பார்த்திருக்க இலையுதிர்காலமாக மாறிய போது, உதிர்ந்த காய்ந்த சருகுகளுடன் அவனது முகம் காட்டிய பலவப்படிக் கண்ணாடியும் உதிர்ந்திருந்தது. அவளின் கல்புக்குள்ளிருந்த அந்த அண்ணனின் உருவம் மட்டும் உதிரவேயில்லை. பின்னர் அவள் தனக்கென எதையுமே நேசிக்க விரும்பவில்லை. தன்னை உட்பட…

அவங்க இன்னமும் சந்தோசமாத்தான் இருக்காங்க….

  • கலு. அப்துல்லாஹ் ரஹ்மத்துல்லாஹ். ஜூன் 10 2016
 

சென்று வா ரமலானே

கடந்து செல்லும்
ரமளானின் இரவுகளில் கண்ணீரால்
கழுவப்பட்ட பாவங்களின்
ஈரம் காயாத கன்னங்களும்
நின்று கால்கடுக்க நள்ளிரவில்
நிஷ்கரித்துக் காய்த்த நெற்றிகளும்
இன்று ஒரு வைகறை விடியலில்
வெளிப்படும் விண்ணொளிக் கீற்றுக்கு
தக்பீர் முழங்கி பெருநாள் காணுகின்றன.

இரவுத்தொழுகைக்கும்
நோன்புக்கஞ்சிக்கும்
நிற்க இடமின்றி நெருக்கடியான ஆலயங்கள்
அடுத்த ரமலான் வரை உறவறுக்கப்படுகின்றன.

பள்ளி மினாரத்தில் மணிப்புறாக்களின்
குக்கூ…கமிடும் திக்ருகள் நாளெலாம் தொடர்ந்தாலும்
திருக்குர்ஆன் ஓதி திக்ருகளும் முழங்கி
ரமளானில் மட்டும்
துஆக்கள் செய்து விண்ணோக்கிய கரங்கள்
இனி ஒரு நீண்ட விடுமுறைக்கு காணாமல் போகும்…

தேய்ந்துபின் வளர்வது
பிறைகளாக மட்டுமே இருக்கட்டும்…
புண்ணியங்கள் தேய வளர்வது
எங்களின் பாவங்களாக வேண்டாம் …

ரமலானே!
அல் ரய்யானின் அழகிய திருவாசலை
அகலத் திறந்து வைத்த அருள்மாதமே…
நீ! மறந்து விடாதே!
நாங்கள் ஓய்ந்து தளர்ந்து
ஓர் நாள் மண்ணுக்கிரையான பின்
கரைசேராப் பாவங்களாய் மஹ்ஷரில்
கண்ணீருடன் தத்தளிக்கையில்
எங்கள் கைபிடித்துக் கரை சேர்க்க வருவாயா?
ஈடேறச் செய்வாயா?
சென்று வா..
இன்னொரு லைலத்துல் கத்ரை சூல் கொண்டு
மீண்டும் வா! எமை மீட்க வா…

ஈத் முபாரக்…

 

நீ அடிச்சியா?

எம்புள்ளைய அடிச்சியா?
——————————————
27 ஆம் கிழமை என்றால் நோன்பு மாதத்தில் லைலத்துல் கதிர் இரவு எனும் ஒரு விசேச ராத்திரியாக முன்பெல்லாம் நம் ஊரில் பள்ளிகளில் சீரியல் லைட்கள் கட்டி எல்லா விளக்குகளும் பின்னிரவு வரை எரிய வைத்து ஒளிவெள்ளத்தில் நின்று இறை வணக்கத்தில் இரவைக் கழிப்பார்கள்.சாயாவெல்லாம் விளம்புவார்கள் ஒரு முறை எங்கள் பள்ளியான ஜாமியுல் அன்வாரில் பாயசமும் குடிச்சேன். அருள் நிரம்பிய பாயசமோ என்னவோ?
ஓரு எட்டு எட்டரைக்கெல்லாம் தொழுகைக்கென பள்ளிக்கு வரும் பெரியவர்களையும் மோதியாரையும் இமாமையும் முந்திக்கொண்டு சின்னப் பையன்கள் கூட்டமாக நின்று கூடிக் கூடி பள்ளியில் பரபரப்பை ஏற்றிக் கொண்டிருப்பார்கள். மோதியார் மசூது மச்சான் அல சின்னப் பெக்கல்லாம் கூட்டம் போடாதைங்கோ? அப்படிம்பார்.
இடையிடையே சட்டு சட்டென அடிக்கும் சத்தம் கேட்கும்,
பெசாம இரிங்கல! கண்களை விரித்து பயம்காட்டிய வண்ணம் பள்ளிவாசல் முழுக்க ஆவியமும் மல்யுத்தமும் பிஷ்கூ பிஷ்கூ டுபாங்கி (துப்பாக்கி) சத்தமுமாய் விளையாடி அலம்பலாக கிடக்கும்.
அப்ப பள்ளிவாசலில் சேட்டை பண்ணி அடி வாங்கிட்டு வீட்டில் போய் சொன்னா வீட்டிலையும் ரண்டு அடி விழும்,
களிவட்ட நாயி போற எடமெல்லாம் கைச் சடத்தம் பண்ணிக்கிட்டு அலைஞ்சா கண்டவண்ட்டயிலாம்அடிவாங்கித்தான் சாவனும்…
ஆனா இப்ப அப்படியில்லை, என் சேக்காளி ஒரு அஞ்சாறு வருசத்துக்கு முந்தி ஒரு பையனை தொழுகையில் பக்கத்தில் நின்று கொண்டு சிரிச்சு விளையாடினான்னு அடிக்கவும் அவன் அங்கனேயே தொழுகையை தூர விட்டுட்டு வீட்டைப் பார்க்க கிளம்பிட்டான், போகும் போது ஒரு விரல் நீட்டி எச்சரித்து சொல்லிட்டுத் தான் போனான்,
நீ என்ன அடிச்சிய்யா? ஒன்ன எங்க பெதாட்டு நல்லம்மாவ கூட்டுவந்து என்ன செய்றேம் பார்!
அடிச்சவரு அங்கேயே நொந்துட்டார், மீதியையும் குழப்பத்துடன் தொழுதுட்டு வாசலுக்கு வந்தா, அங்கே அவன் பெதாட்டு நல்லமாவுடன் வாசலில் நின்னுக்கிட்டு இவர் இல்ல, இவர் இல்லன்னு காட்டிக்கிட்டே வந்து,
இவர் தாம் மா ன்னு ஆளைப் புடிச்சு அங்கேயே நிறுத்த,
அடே! ஒன்ன சேட்ட பண்ணாதேன்னு சும்மா தான செல்லமா தட்டுனே ன்னு, நண்பர் எவ்ளோ சொல்லியும் அந்த பெதாட்டும்மா,
இங்கேரு நீ என் அருமப்புள்ள மேல வச்ச கைய முறிச்சா என்னா? ன்னு கேட்டுட்டு போக, எங்களுக்கு ஒரே சிரிப்பா போச்சு,
விடப்பா… நம்ம காலத்துலய்லாம், சொய்ய (காதை) பிடிச்சு தூக்கி வாசல்ல கொண்டு போயி எத்தி உட்டாலும் கேக்க நாதியிருக்காது..
இப்ப அபடியில்லை.

 

ஒரு வருட ஹஜ்ஜுப் பயணம்.

zamzam
ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் ஹஜ்ஜுக்குப் போகவேண்டி சுமார் நான்காண்டுகளாக சன்னஞ்சன்னமாக பொருள் திரட்டி, பேசிவைத்து திட்டமிட்டு ஹஜ் செய்ய சென்ற கொஞ்சம் பேரில் எங்களின் பள்ளிக்கூடத்து வாப்பா எனும் கலு. மு. அஹமது முஹைதீன் ஆலிம் சாஹிப் அவர்களும் ஒருவர்.
அந்தக் காலத்தில் ஹஜ்ஜை நினைக்கவே மனம் தளர்ந்து விடும்படியான திருப்தியான போக்குவரத்து இல்லாத நிலையில் கிடைக்கும் வாகனங்களிலும் போக்குவரத்தில்லாத இடங்களில் நடந்தும் பம்பாய் சென்று கப்பல் மூலமாக கடல் கடந்து ஜித்தா வரை வந்து பின்னர் கிடைக்கும் சில வாகனங்களையோ அல்லது சில இடங்களில் கால் நடையாகவோ கடந்து மக்கா மதீனா என தல்பியா முழங்கிக்கொண்டே திரிந்து எட்டொன்பது மாதங்களில் தனது ஹஜ்ஜுப் பயணத்தை முடித்துத் திரும்பினார்கள் என அவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஜம்ஜம் தண்ணீர் கிணற்றின் கரையில் நீண்ட வரிசையில் காத்துக் கிடந்தது மணிக்கணக்கில் செலவிட்டு ஒரு வாளி போட்டு இறைத்துக் கொடுத்த தண்ணீரை அவர்கள் ஆசை தீர குடித்தும் கொஞ்சம் கலயங்களில் சுமந்துமாய் தனது கடமையை நிறைவேற்றியதை சொல்லும் போது அதன் வலியும் ரணமும் தெரியவில்லை.. இன்னும் ஹஜ்ஜை முடித்துத் திரும்பிய அவர்கள் சில காலம் காய்ச்சலால் கஷ்டப்பட்டதாக சேர்த்தும் சொல்வார்கள்.
கால முன்னேற்றத்தில் கொதிக்கும் வெயிலில் கூட கால் பதித்தால் குளிர்ச்சியை ஊட்டும் பளிங்குத் தரையில் நாம் தவாப் செய்யும் நாம் கைக்கெட்டிய இடங்களில் எல்லாம் ஜம்ஜம் நீரை வினாடிகளில் எடுத்துப் பருகலாம். இன்று அனைத்து வகையிலும் நாம் பெரும் சுகங்களின் வழி நாமும் நமது வாரிசுகளும் கொடுத்து வைத்தவர்கள் தான். கஷ்டமே இல்லை.

 

படியளப்பவன் அவனல்லவா..

முஹ்ஸின்
———————
தன்வீர் நம்ம நாட்டுக்காரன் உத்தர் பிரதேச பய்யா, ஒடிசலான தேகம், அவன் இங்கே எங்களது நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலான தொழிற்சாலை பணிக்கு கைச்சாத்திட்டு வந்தமர்ந்து ஒரு ஆறு மாதம் ஆனபின், திறமையான அவனது கணக்காளர் பணியில் நிர்வாகத்தில் தன் திறமையை நிரூபித்தான்.
இவனது கண்காணிப்பில் மேல்மட்ட நிர்வாகத்தில் ஊழல் செய்ய வழியில்லாத நிலை ஏற்பட அவனது இருப்பே பழைய பெருச்சாளிகளின் கண்ணுக்குள் கிடந்த துரும்பாக உறுத்திக் கொண்டிருக்க, அவனை கிளப்ப சமயம் தேடியவர்களுக்கு மிகவும் கஷ்டப்படாமலேயே ஒரு வாய்ப்பு அமைந்து விட்டது.
அவனும் ஒரு நாள் காலையில் கூப்பிட்டனுப்பிய முதலாளியை நேரில் சந்திக்க தலைமை அலுவலகமான எங்களின் அலுவலகம் வந்து சேர்ந்தான். நானும் அவனை உள்ளே போய் பார் என சொல்லிவிட்டு என்ன நடந்தாலும் சபூர் செய் என கூறினேன்.. இரண்டு நாட்கள் நிம்மதியின்றித் தவித்த எதிர்காலத்தையே ஒரு கேள்விக் குறியாக்கி அதன் மடியில் துவண்டு போனவனை ஆறுதலாக ஓரிருவார்த்தைகள் சொல்லி உள்ளே அனுப்பினேன்.
ஒற்றை வார்த்தை….
உனக்கான கணக்கை முடித்துக் கொள்… இன்றிரவே முடிந்தால் கிளம்பு.
திரும்பி வந்தான், கல்பு உடைந்து கண்நிறைய முட்டிய நீர் திவலைகள், நெஞ்சுக்கூட்டுக்குள் ஒரு சமுத்திரம் சுனாமியின் ஓங்கி உயர்ந்த ஒரு அலை எழுப்பி ஆர்ப்பரித்து அவனை சுருட்டியது போல பேச எதுவுமின்றி தளர்ந்தவன் என் அருகில் சில நிமிடங்கள் தனது கையில் கொஞ்சம் டிஸ்யு பேப்பர் எடுத்துக் கொண்டு சென்று ஓரமாக சென்றழுதுவிட்டு திரும்பி வந்தான்.
இரண்டு சகோதரிகளை கரையேற்றவும் உடைந்து கிடக்கும் பழுதான வீடு போன்ற ஒரு மண் குவியலை சீரமைக்கவும் எனக்குச் சில கமிட்மெண்டுகள் என ஆங்கிலத்தில் சொல்லிக் கொண்டு திரும்பவும் உடைய நின்றவனை…
இங்கே வருவதற்கு முன்னர் நீ யாசகம் செய்தா வாழ்ந்தாய். தளராதே, போ! நம்பு அல்லாஹ் உன்னை நிச்சயம் கை விட மாட்டான்.
நடந்து ஆறு ஆண்டுகள் முழுக்க கழிந்தபின் சில மாதங்களுக்கு முன் லுலு மாலில் சன நெருக்கடியில் ஹாய் அப்துல்லாஹ் எனும் பழக்கமான குரலில் திரும்பினேன் என்னை இழுத்து அணைக்கும் அவன்…
தன்வீர்!
அவன் எங்களின் சப்ப்ளையர் கம்பெனியில் எங்களின் கணக்குப் போல ஏழு எட்டுக் கம்பெனிகளின் கணக்காளர் தலைவராக மிக நல்ல பதவியில் இருக்கிறான். இதுவரை ரியாத்தில் பணி தற்போது கோபருக்கு ஒரு வேலையாக,
எனக்கு ஆமவடை ரெண்டும் ஒரு கட்லெட்டும் வாங்கி பார்சல் கட்ட சொல்லிட்டு நீ வடை பிரியமா சாப்பிடுவாய் இல்லையா? மறக்க முடியுமா? என்னிடம் கேட்டவன் கொஞ்சம் பூசினாற்போல அழகாக இருந்தான்….
அல்லாஹும்ம அந்த முஹ்சின். அவனுக்கும் ரப்பு தான் படியளக்கின்றான்.

 

PILOT பேனா…

pen
அழகான நீலமும் பச்சையும் கலந்த தங்க கலர் மூடியுடனான பேனா ஒன்னு வச்சிருந்தேன்.. அதன் மேல் பைலட் ஜப்பான் என அச்சிட்டு இருந்தது. அதன் மதிப்பை நான் உணரு முன்னமே நீண்ட நாட்களுக்குப் பின் மலேசியாவிலிருந்து வரும்போது அன்புடன் அதனை எனக்கு வாங்கித் தந்து, எனது அன்புத் தந்தை வாப்பா! இது விலையுயர்ந்த பேனா இதனை பாதுகாத்து வைத்து எழுது! கை விரல்களில் மை கசியாது சட்டை பாக்கெட்டும் மையாகாமல் இருக்கும் கவனமா வச்சுக்கோன்னு தந்தார்கள்.
பள்ளிக்கு கொண்டு சென்றேன். ஒரு இரண்டு நாளாக அந்தப் பேனா ஆசிரியர்களால் வாங்கி ஆச்சரியமாக பார்க்கப்பட்டு சிலாகித்து பேசும்படியான பொருளானது. அந்த நேரத்தில் அது அபூர்வம். “அலே! பைலட் பேனா யாரோ ஒர்த்தன் இந்த வகுப்புல வச்சுருக்கானாம்லே அவன எங்க லே?” ன்னு நுழையும் சார்வாளுக்கு நான் பயந்தாலும் பின்னர் அவர் அருகில் வந்து அந்தப் பேனாவை வாங்கி பார்த்து நான் வச்சுக்கடட்டுமான்னு சும்மா கேப்பார்.
ஒரு நாலு நாள் கூத்துக்குப் பிறகு ஒரு நாள் பேனாவைப் புடுங்கி என் தாயார் வைத்துக்கொண்டு, நீ ஒன் பழய பேனாவக் கொண்டு போ, அதவச்சு படிச்சா போதும்ன்னு சொல்லிடுச்சு. திரும்பி தரவே இல்லை.
அழுது அழுது கேட்டுப் பார்த்த பின்னால கடேசியில் சொல்லுச்சு ” ஒரே கண் தி(ரு)ஷ்டி, பிச்சக்காரன் மாதிரி நாலு பேர் கண்ணுக்கு உறுத்தாம வாழ்ந்து நோய் நொடியில்லாம இருக்கணும் வாப்பா….
எப்பவும் உம்மாவுக்கு நான் நல்ல சட்டை போட்டா நல்ல அழகா தெரிஞ்சா கூட அன்னிக்கு கண்தி(ரு)ஷ்டிக் கழிக்க ஆலாப் பறக்கும்.
எவ்வளவு பாதுகாப்பும் பிராத்தனையும் மிக்க ஒரு வடிவம். அது ஒரு தாய்க் கோழியின் சிறகுக்குள் குஞ்சுகளை அணைத்துப் பாதுகாக்கும் ஒரு லாவகம்.

 

தேன்கூடு நல்ல தேன்கூடு… & நெறிபிறழ்ந்த பாசம்

எங்களுக்கு ட்ரில் மாஸ்டர் அப்படின்னு அழகான அங்கில வார்த்தைப் புழக்கம் வர நான் படிச்ச அந்த நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு ஆசிரியராக வந்த ஒசலாத்தன் மஜீத் சார் தான். அவர் டிரில் மாஸ்டர் என்பதை விட பக்காவான திரில் மாஸ்டர் ஆவார். அவ்வளவு கண்டிப்பு, வரிசை ஒழுங்குபடுத்தும் நேர்த்தி, களியல்(கோலாட்டு), லெசீம் (சிங்கி), கயறு பின்னல், என அமர்க்களப் படுத்தினார்.
மஜீத் சாரை சக ஆசிரியர்கள் okm அப்படின்னு செல்லமாக கூப்பிடுவார்கள்,
அவரது விளையாட்டுப் பயிற்சிகளில் சில சினிமாப் பாடல்களை மெட்டுக்களை பயன்படுத்தி பள்ளிப் பெயரை புகுத்தி பாட்டமைத்து வகுப்பில் அந்தப் பாடலை எழுதிப் போட்டு மனப்பாடம் செய்து பயிற்சியின் போது நாங்கள் பாட மெய்சிலிர்க்கும்.
சல்த்தே சல்த்தே என இந்தி மொழியில் வெளிவந்த படத்தின் ஒரு பாடலான சல்த்தே சல்த்தே மேரே ஏக் கீத் யாத்ரக்னா… எனும் அப்பாடலை லெசிம் விளையாட்டுக்கு பயன்படுத்தி ஒற்றை ட்ரம் எனும் கொட்டு முரசின் தாளம் தப்பாது நாங்கள் அந்த சதங்கை கோர்க்கப்பட்ட லெசீமை அசைத்தாடுவோம்.
மறக்க முடியாத அந்த விளையாட்டுப் பிரியடுகள் எனப்பட்ட பாட வகுப்புகள் எங்களைப் பொருத்தமட்டில் பொற்கால வகுப்புக்கள். அப்புறம் எல்லாம் போலியான விளையாட்டு வகுப்புகளே..
கண்ணாலே மயங்கும் காலமே எனும் குலேபகாவலியின் பாடல் இன்னமும் அதன் மெட்டமைப்பில் வேறு வார்த்தைகளுடன் எந்நாளும் பள்ளி செல்வோம் என தொடங்கி… என் இதயத்தில் இன்னமும் மறக்காமல் கல்வெட்டுப் போல் தங்கிவிட்டது..
அடிக்கடி நான் பாடுவேன்.
okm சார் எனும் அந்தப் பண்பாளர் கொஞ்ச நாள் தான் என்னைப் போல பள்ளிப் பணியாற்றிப் பின் கடல் தாண்டி இன்று நம் கல்புகளில் மட்டுமே நின்று நம்மைவிட்டுக் காலமும் தாண்டிவிட்டார். அல்லாஹும்மஹ்பிர்லீ
———————————————————————————————————-
தனது இல்லத்தில் தனது கண்காணிப்பிலிருக்கும் மாமியாரை ஏறெடுத்தே பாக்காம அவரைக் கவனிப்பதைக் காட்டிலும் அதிக அக்கறையெடுத்து தனது பிறந்த வீட்டிலுள்ள தன் உம்மா வைக் கவனிக்க அதிக சிரத்தை எடுத்துக் கொள்கின்றனர் நம் ஊரில் தற்போது பெண்மக்கள்.
இனிப்பு நோயாளியான உம்மாவுக்கு அவரது மருமகள் உணவுக் கட்டுப்பாடு விதித்து அவரது இனிப்பு நீரின் அளவு அதிகரிக்காமல் கவனிக்கும் போது, தன வீட்டிலிருந்து தான் சமைக்கும் தோசையும் இனிப்புப் பலகாரமுமாக சுமந்து கொண்டு போய் மருமகளுக்குத் தெரியாமல் கொடுத்துவிட்டு வரும் மகளை வழியில் கேட்பவர்களிடம் சொல்வாள், “எங்க உம்மா வாய்க்கு ருசியா என்ன கேட்டாலும் ஊட்ல இருக்கவா குடுக்கமாட்டாம ஜெயில்ல அடைச்ச மாதிரி வச்சிருந்தா நாம் தான் போயி மனசு தாங்காம ஒரு நல்லது(?) பொல்லது குடுக்க வேண்டியிருக்கு”ன்னு…
இப்படி வயசான காலத்துல உம்மாக்கு நோய் கூடி சீக்கிரம் போய் சேரட்டுமின்னு சட்டி செமக்கும் மகளகள் இப்ப அதிகம் நம்மூரில்.

 

தூண்டிலுக்கான புழுவாய்

தூண்டிலில் கொழுவப்பட்ட துடிக்கும் புழுவாக…
———————————————————————————-
புத்தாடை அணிந்த விழா நாட்களில் ஒரு இனம் புரியா மகிழ்ச்சி தொற்றிக் கொள்வது போல, ஒவ்வொரு மாதத்தின் இறுதி நாட்களும் அடுத்த மாதத்தில் நாம் முன்னெடுக்கப் போகும் கணக்குக் கூட்டல்களை அதன் மனச்சோர்வை, அடுத்துவரும் மாத முதல்நாள் பெற்ற ஊதியம் மூலம் பெரும் மகிழ்ச்சியால் வென்றுவிடுவது ஒரு வழக்கமான உணர்வு வழி வாழ்வியல் உந்துதலே…
ஒரு காலம் இருந்தது. முத்திரை பதிக்கப்பட்ட பதிவுப் புத்தகத்தில் கையெழுத்திட்டு கைநிறைய சம்பாத்தியம் பெற்ற என் சக ஊழியர்கள் ஆடவரும் பெண்டிரும் சூழ நிற்கையில், அவர்களுக்குச் சமமாக அதற்கும் மேலாகவும் வேலை வாங்கப்பட்டும் சில நூறு ரூபாய் நோட்டுக்களே ஊதியமாக பெற முடிந்தது. அதுவும், பணியில் சேர நாங்கள் கொடுத்த கணிசமான வைப்புத் தொகை வங்கியில் போடப்பட்டு பரிவர்த்தனையில் பெற்ற மாதவட்டியில் பெற்ற தாள்களை எண்ணி இதை வைத்துக்கொள்! என ரத்தத்தை வியர்வையாய் சிந்தியதன் பலனாக அவமானங்களையும் வலியையும் ஊதியமாய்ப் பெற்றுக் கழிந்த நாட்களாகும்.
அந்த நாட்களை மறக்க முடியுமா?
எனது கற்பிக்கும் தாகம் கடலையும் தோற்கடிக்கும் அசாத்தியப் பொறுமையை என்னுள் விதைத்தது. ஏமாளியாக்கப்பட்ட என்னை அவர்களின் சதிவேலை அறியமுடியாமல் நீண்ட காலம் காத்திருக்கச் செய்தது, என் கண்களை என் கைகளைக் கொண்டே குத்த வைக்க உறவு வேடம் போட்டபடி அன்பொழுகப் பேசி என்னை நம்பவைத்து நாடகமாடி நாசம் விளைவித்தது. சில கடைக்கோடி இழி மனிதர்கள் வசம் என் கண்ணியம் நிறைந்த வாழ்க்கை ஒப்படைக்கப்பட்ட போது கழிவிரக்கமிக்க என் பொன்னான தருணங்கள் இன்னமும் நினைவில் வந்து சமரசம் செய்து கொள்ள முடியாமல் விழலுக்கு இறைத்த நீராய் என் உழைப்பை பிடுங்கியதை எண்ணி மாய்ந்து போகிறேன்.
ஒவ்வொரு முறையும் கஅபாவின் கில்லா எனும் அங்கியைப் பற்றியபடி என் ஒவ்வொரு பிரார்த்தனையும் மனதை சிதைத்த நிகழ்வுகளை மையம் கொண்டபடியும் மனதுக்கு ஆறுதல் கேட்டபடியும் அமைகின்றன.
மரித்துப் போன மௌன சாட்சிகளான என் உயிரான அன்பு வாப்பாவும் உம்மாவும் இறுதிக் காலங்களில் அவர்தம் கன்னம் நனையக் கண்ணீர் வடிக்க என்ன நம்பவைத்து ஏமாற்றிய உறவுகளும் ஒரு காரணம்.
கருணையாளன் காருண்யன் அல்லாஹ் என்னை மகிழ்வாகவே இன்று வைத்திருக்கிறான். என்னை பெற்றவர்கள் இந்த உலகில் என்னில் எதிர்பார்த்த இந்த நிலையை காணாமலே மரித்துப் போனார்களே எனும் சோகம் மட்டும் என்னை அடிக்கடி வேட்டையாடிக் கொல்லும் ஒரு நிஜம் ஆகும்.
அல்லாஹ் நீயே நிரந்தரமானவன்.
அல்லாஹுமஹ்பிர்லீ…